பிழைப்புவாத புழுக்கள் கொண்டாடிய இரண்டாவது தீபாவளி

சமூகம் என்கிற மக்கள் கூட்டத்தில் தான் தாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வு துளியுமற்ற விதம் விதமான, ரகம் ரகமான பிழைப்புவாதிகளை நாம் பார்த்திருக்கிறோம், பார்த்துக் கொண்டுமிருக்கிறோம் அண்டை வீடுகளிலும், அலுவலகங்களிலும். பெரும்பாண்மை மக்களின் நலன் சார்ந்த விசயங்களுக்காக அவர்களிடம் பேசியிருக்கிறோம். அவர்களுக்குள் துளியாவது சமூக உணர்வை ஊட்டிவிட முடியாதா என்றும் போராடியிருக்கிறோம். ஆனால், எப்போதுமே மேன்மைக்குரிய திருவாளர்கள் பல்லை இளித்துக்கொண்டு நம்மிடமிருந்து நழுவி விடுவார்கள். அப்பேர்ப்பட்ட பிழைப்புவாத புழுக்களுக்கு ரவுத்திரம் பொங்கி சமூக உணர்வு கொப்பளித்தால் என்னவாகும் ? அது தான் இரண்டாவது தீபாவளி !

தனது பாட்டனை கொன்றதற்காக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று சொரணை கெட்ட கூட்டம் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில்  தான் தென்னிந்திய அளவில் பேசப்பட்ட ஒரு முக்கியமான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.  பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகிலுள்ள பாதன்வல் என்கிற கிராமத்தில் தலித் மக்கள் கோவில் நுழைவு போராட்டத்தை நடத்தினார்கள். இறுதியில் அது இரு தரப்புக்குமிடையிலான  மோதலாக உருவெடுத்து அரசுக்கு தலைவலியை கொடுக்கவே அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சினையை பெரிதாக்காமல் அமுக்கியது. அப்போதைக்கு பிரச்சினை அமுங்கிவிட்டாலும் ஆதிக்க சாதி வெறியர்கள் தலித் மக்களை பழி தீர்க்க தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பாதன்வல் கிராமத்தில் தலித் இளைஞர்களை கல்வியில் முன்னேற்றுவது, வேலை வாங்கிக்கொடுப்பது என்று அவ்வூரின் இளைய தலைமுறையினருக்கு அனைத்து உதவிகளையும் செய்து  வந்தவர் உள்ளூர் பள்ளியின் ஆசிரியர் நாராயணசாமி.

இந்த நாட்டில் எதில் தான் சாதி இல்லை ? கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கா என்ன ? அந்த கிராமத்தில் கிரிக்கெட் டோர்னமெண்டை நடத்துபவர்கள் ஆதிக்கசாதி வெறியர்கள் என்கிற போது அங்கே ஜனநாயகம் எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் அவுட் என்றால் அவுட், வைய்ட் என்றால் வைய்ட், நோ பால் என்றால் நோபால் தான். கிரிக்கெட்டிலும் சாதி பார்த்து தமது இளைஞர்கள் தோற்கடிக்கப்படுவதால் நாராயணசாமி தலித் இளைஞர்களை அழைத்து சாதி இந்துக்கள் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், நாமே தனியாக ஒரு டோர்னமெண்ட்டை நடத்தலாம் என்றும் கூறி அவர்களை ஒருங்கிணைத்து அதே ஊரில் ஒரு டோர்னமெண்டையும் நடத்துகிறார். இது சாதிவெறியர்களுக்கு விடப்பட்ட சவாலாகிறது. வெறி கொண்ட சாதிவெறி கும்பல் தலித் இளைஞர்களுக்கு அனைத்து வகையிலும் உந்து சக்தியாக நிற்கும் நாராயணசாமியை கொண்றொழிக்கத் திட்டம் தீட்டுகிறது.

நாராயணசாமி திட்டமிட்டிருந்தபடி முதல் டோர்னமெண்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் அவருடைய மகன்  மதுக்கரும் நடராஜ் என்கிற இளைஞரும் வருகிறார்கள். பேசிக்கொண்டே நடந்த மூன்று பேரையும் திடீரென்று வழி மறித்தது ஒரு கும்பல். சுமார் இருபத்து மூன்று பேர் கொண்ட சாதிவெறியர்கள் மூன்று அப்பாவிகளையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கத் துவங்கியது. மூவரும் இரத்தம் சொட்டச் சொட்ட கொடூரமாக தாக்கப்பட்டனர். மிருகத்தனமான தாக்குதலின் இறுதியில் அதே இடத்தில் இருவரும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவரும் இறந்து போகிறார்கள்.

நாராயணசாமி உடன் வந்த நடராஜ் ஒரு படித்த பட்டதாரி. அவருடைய குடும்பத்தில் அவர் மட்டுமே படித்தவர், சகோதரர்கள் இருவரும் உடல் ஊனமுற்றவர்கள். குடும்பத்திற்கு நடராஜ் ஒருவர் மட்டுமே சம்பாதித்துத்தரக்கூடியவர். இப்போது அந்த குடும்பத்திற்கு அவரும் இல்லை.

தாழ்த்தப்பட்ட ஏழைகளுக்கெதிராக இழைக்கப்பட்ட இந்த அநீதியை விசாரித்து நீதி வழங்க இந்திய நீதி மன்றம் ஒன்றிற்கு குறைந்தப்பட்சமாக(!) பதினேழு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. (மூன்று சாதிவெறியர்கள் இறந்து விட்டனர்) எனவே, 20 பேருக்கு ஆயுள் தண்டனை என்று தீர்ப்பளித்திருக்கிறது மைசூர் நீதிமன்றம். இந்த தீர்ப்பும் கூட பதினேழு ஆண்டுகளாக பல்வேறு தலித் அமைப்புகளும் இடைவிடாது நடத்தி வந்த போராட்டங்களின் நிர்பந்த்தம் காரணமாகவே வந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு கேவலமான தீர்ப்பு என்பது ஒரு புறம் இருக்க, அதை விட கேவலமான இன்னொரு விசயம் என்னவென்றால் கொலைகாரர்கள் அனைவரும் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் ! அத்துடன் இந்த சாதிவெறி கொலைகாரர்களுக்கு ஆஜரான வழக்கறிஞர் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும், அரசு தரப்பு சாட்சிகள் உறுதியாக இல்லை என்றும் பேட்டியளிக்கிறார். உயர்நீதி மன்றத்தில் இந்த சாதி வெறியர்கள் அனைவம் கூட விடுவிக்கப்படக் கூடும். அப்படி நடந்தால் அதில் அதிர்ச்சியடைவதற்கும் ஒன்றுமில்லை, அது தான் இந்திய ஜனநாயகம் !

இந்தியாவிலுள்ள ஏழைகள் (அனைத்து சாதி ஏழைகளும்), தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபாண்மை மக்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த நாட்டின் மிகப் பெரும்பாண்மை மக்கள் அனைவரும் ஒரு முகாமாக இருக்கிறார்கள். இன்னும் எளிமையாக சொல்வதென்றால் இவர்கள் அனைவரும் இந்தியாவிற்குள் ஒரு தனி இந்தியாவாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த காலத்திலும் இந்த நாட்டில் நீதி வழங்கப்பட்டதில்லை. இதற்கு மேற்கூறிய நிகழ்வு ஒன்று மட்டும் ஆதாரம் அல்ல, லட்சக்கணக்கான நிகழ்வுகள் ஆதாரங்களாக இருக்கின்றன. இந்த நாட்டின் ஜனநாயக தூண்கள் அனைத்தும் இவர்களுக்கு எதிராகவும், இவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு எதிராகவுமே செயல்படுகின்றன.

இன்னொரு இந்தியாவாக டாடா, பிர்லா, அம்பானி மிட்டல் போன்ற தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகள், இவர்களுக்கு அடியாள் வேலை செய்யும் மன்மோகன் சிங், ப.சி, அத்வானி போன்ற ஓட்டுப்பொறுக்கிகள். மற்றும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல், மேட்டுக்குடி லும்பன்கள், யுப்பிகள் ஆகிய இவர்கள் அனைவரும் இன்னொரு இந்தியாவாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தான் இந்த நாட்டில் கலர் கலரான நீதியும், ஜனநாயகமும் 7/24 சர்வீஸாக வழங்கப்படுகிறது. எனவே இந்தியா ஜனநாயக நாடு !

அம்பானி என்கிற உழைப்பால் உயர்ந்த உத்தமரின் மகன் இந்த நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் லிடமிருந்து ஆயிரத்து இருநூறு கோடி ரூபாயை பிக் பாக்கெட் அடித்திருக்கிறான். அவன் மீது எந்த வழக்கும் இல்லை! அம்பிகா என்கிற தொழிலாளியை நோக்கியா நிறுவனம் பணிக்கொலை செய்திருக்கிறது அவன் மீதும் வழக்கு இல்லை. இது தான் இந்தியாவின் ஜனநாயகம். இங்கு முதலாளிகளுக்குத்தான் ஜனநாயகம் ஏழைகளுக்கு சர்வாதிகாரம் தான் !

சங்கராச்சாரி என்கிற மாபாவி யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளிவிட்டு லோக ஷேமத்துக்காக தவம் செய்து கொண்டிருப்பார். ஆனால், ஒரு பாவமும் அறியாத அப்சல்குருவை இசுலாமியர் என்பதற்காகவே தூக்கிலிடுவார்கள். பிரவீன் தெகாடியா என்கிற பார்ப்பன பயங்கரவாதி ”சூலத்தின் இடது முனை முசுலீம்களுக்கு, வலது முனை கிறித்தவர்களுக்கு, நடுமுனை மதச்சார்பின்மை பேசும் இந்துக்களுக்கு” என்று பார்ப்பன பாசிச விஷத்தைக் கக்குவான். ஆனால், அருந்த்ததிராய் காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமான பகுதி இல்லை என்கிற வரலாற்று உண்மையை சொன்னால் அடிக்கப் பாய்கிறார்கள். இது தான் இந்திய ஜனநாயகம் ! மோடி, தெகாடியா போன்ற பயங்கரவாதிகளுக்கு ஜனநாயகம், அருந்ததிராய், ஹிமான்சு குமார் போன்ற ஜனநாயகவாதிகளுக்கு சர்வாதிகாரம்.

என்றைக்குமே இந்த நாட்டில் உழைக்கும் மக்களுக்கு நீதி வழங்கப்பட்டதில்லை. நீதி என்ற ஒன்று கண்ணில் காட்டப்பட்டிருந்தால் அது குதிரைக்கு கொம்பு என்கிற உண்மையை போன்றது தான். மாறாக இந்த தேசத்தின் பெரும்பாண்மை மக்களுக்கு நயவஞ்சகமும், கழுத்தறுப்புகளும், முதுகில் குத்துதலும் தான் கிடைத்திருக்கிறது, கிடைத்துக்கொண்டுமிருக்கிறது. அநீதி இழைக்கப்பட்ட ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கு பார்ப்போமே. கேள்விக்குறிக்கு பிறகு இல்லை.. இல்லை.. என்று மட்டும் வாசித்துக்கொள்ளுங்கள்.

பஞ்சாப் படுகொலையில் சீக்கியர்களுக்கு நீதி கிடைத்ததா ? விஷவாயுப் படுகொலையில் லட்சக்கணக்கான போபால் மக்களுக்கு நீதி கிடைத்ததா ? மும்பை கலவரத்தில் தொலைந்து போன குழந்தைகளுக்கு நீதி கிடைத்ததா ? கயர்லாஞ்சியில் போட்மாங்கேவுக்கு நீதி கிடைத்ததா ? மேலவலவில், திண்ணியத்தில், பாப்பாபட்டியில், கீரிப்பட்டியில், பாதன்வலில் இங்கெல்லாம் தலித் மக்களுக்கு நீதி கிடைத்ததா ? டாடாவாலும் போலிக் கம்யூனிஸ்டுக ளாலும் கொல்லப்பட்ட சிங்கூர், நந்திகிராம் மக்களுக்கு நீதி கிடைத்ததா ? தண்டகாரண்யாவில் பழங்குடி மக்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக பேசிய அகிம்சாவாதி ஹிமான்சு குமாருக்கும் நீதி கிடைத்ததா ? குஜராத்தில் பார்ப்பன பயங்கரவாத கும்பல் நட்த்திய இனப்படுகொலையில் உறவுகளை இழந்த இசுலாமியர்களுக்கு நீதி கிடைத்ததா ? வரலாற்றுண்மையை புதைத்தெழுதிய பாபர் மசூதி தீர்ப்பில் நீதி கிடைத்ததா ? இல்லை! இப்படி எதற்குமே இல்லை, இல்லை என்றால் பிறகு யாருக்காகத் தான் இந்த நீதி மன்றங்கள், அரசு எல்லாம் இருக்கிறது ? நமக்காகவா ? இல்லை, அதற்கும் இல்லை என்பது தான் பதில். அவையெல்லாம் ’ஜனநாயக இந்தியாவிற்குள்’ வாழும் மேற்கூறிய இந்தியர்களின் நலன் காக்கவே செயல்படுகின்றன. எனவே தான் அவை ஏழை மக்களுக்கு அநீதிகளையே வழங்குகிறது. எனவே இந்தியா என்றைக்குமே ஒன்றல்ல இரண்டு !

இப்போது பிழைப்புவாத புழுக்கள் கொண்டாடிய இரண்டாவது தீபாவளிக்கு வருவோம். சமூகப் பிரச்சினைகள் எதற்கும் செவி சாய்க்க மறுக்கும் பிழைப்புவாத கோழைகள், பொதுப் பிரச்சினைகளுக்காக நடக்கும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்களை கண்டு கடுப்படைந்து முகம் சுழிக்கும் காரியவாதிகளுக்கெல்லாம் கடந்த ஒன்பதாம் தேதி சமூக உணர்வு பீறிட்டெழுந்தது. ’சமூகம்’ என்றாலே என்னவென்று அறிந்திராத இந்த வீரர்கள் அனைவருமாக சேந்து கொண்டு சீருடை ரவுடிகளான போலீசு நடத்திய கோவை என்கவுண்டரை நியாயப்படுத்தியும், போலீசு ரவுடிகளை நாயகனாக்கியும் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடியிருக்கிறார்கள்.

மோகன்ராஜ் என் கவுண்டரை கொண்டாடும் ’மனிதாபிமானம்’ கொண்ட, ’சமூக உணர்வு’ ள்ள இவர்கள் அனைவரும் மேற்கண்ட பாதன்வல் வழக்கில் மூன்று பேரை துள்ளத்துடிக்க கொன்று போட்ட கொலைகாரர்களுக்கு என்ன தீர்ப்பை வழங்குவார்கள் ? இவர்கள் தான் கொலைகாரர்கள் என்று தெரிந்திருந்தும் இத்தகைய கேடுகெட்ட தீர்ப்பை வழங்க பதினேழு ஆண்டுகள் இழுத்தடித்த நீதிபதிகளுக்கு என்ன தீர்ப்பு ? தீர்ப்பு வழங்கிய பிறகு இருபது கொலைகாரர்களையும் பினையில் விடுவித்திருக்கிறாரே இன்னொரு நீதிபதி, அவருக்கு என்ன தீர்ப்பு ? அனைவருக்கும் என்கவுண்டர் தானா ? எனில் அந்த புன்னியக்காரியத்தை செய்யப்போவது யார் ? அதற்காக இந்த ’வீரர்கள்’ எப்போது குமுறி கொந்தளிக்கப்போகிறார்கள் ?

 

இஷ்ரத் ஜஹன் போலி மோதல் படுகொலையும், கயர்லாஞ்சி படுகொலையும்

கயர்லாஞ்சியில், தாயையும் மகளையும் நடு வீதியில் கூட்டாக வன்புனர்ந்து, அவர்களுடைய யோனிக்குள் மூங்கில் கம்புகளை அடித்து இறக்கியவர்களை நீதிமன்றம் நிரபராதிகள் என்று விட்டுவிட்டது. கோவையில் நீதிக்காக நிற்கும் நீங்கள் சொல்லுங்கள் அவர்களை என்ன செய்யலாம் ?

இஷ்ரத் ஜஹான் என்கிற அப்பாவி கல்லூரி மாணவியை கடத்தி பின்னர் அவருக்கு தீவிரவாதி என்று முத்திரை குத்தி படுகொலையும் செய்தார்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகள். தற்போது அந்த வழக்கில் கைதாகி இருக்கும் பொறுக்கிகளை விசாரித்துக்கொண்டிருக்கிறார்களாம்! அவர்களை என்கவுண்டரில் போடலாமா அல்லது நீதிமன்றமே விசாரிக்கட்டுமா ?

காஷ்மீரிகளுக்கு சொந்தமான காஷ்மீரிலுள்ள- ஷோபியன் மாவட்டத்தில் இரண்டு காஷ்மீரி பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பின்னர் கொலை செய்து கால்வாயில் வீசிய இந்திய ராணுவ வீரர்(!)களுக்கும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று என்கவுண்டர் தானா ? எனில் இது குறித்து தினமலருக்கு பின்னூட்டம் போடுவீர்களா ? மயிர்க்கால்கள் சிலிர்க்க பதிவெழுதுவீர்களா ?  .

இரண்டு குழந்தைகளின் கொலைக்கே கொதித்து போய் என்கவுண்டரை பரிந்துரைக்கிற நீங்கள் போபாலில் இருபத்து மூவாயிரம் பேரை ஒரே நாள் இரவில் கொன்ற (இதில் பல்லாயிரம் குழந்தைகளும் அடக்கம், தற்போது பிறக்கும் குழந்தைகளும் படத்திலிருப்பதை போலவே பிறக்கிறார்கள்), 5 லட்சம் இந்திய மக்களை ஊனமாக்கிய வாரன் ஆண்டர்சனையும், அவனுக்கு அப்போதும் இப்போதும் கைக்கூலி வேலை செய்து கொண்டிருக்கிற ஓட்டுப்பொறுக்கிகளுக்கு எதை பரிந்துரைப்பீர்கள் ? என்கவுண்டரா, ஃபேக் என்கவுண்டரா ?

பாதிக்கப்பட்ட போபால் குழந்தைகள்

மேலளவில் பட்டப்பகலில் ஓடும் பஸ்ஸில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் முருகேசனை படுகொலை செய்த ஆதிக்க சாதி வெறியர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ளலாமா ?

மோகன்ராஜ் என்கவுண்டரை ஆதரித்து நாலடிக்கு நாக்கை நீட்டிக்கொண்டு வந்த ’ஒன்பதாம் தேதி சமூக உணர்வாளர்கள்’ அனைவரும் இவற்றுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டும். பணக்கார சேட்டு பிள்ளைகளுக்காக நெற்றிக்கண்ணைத்திறப்பதற்கு முன்னால் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் பக்கம் கொஞ்சம் தமது மூன்றாவது கண்ணைத் திருப்பிப் பார்த்து கருத்து தெரிவிக்க வேண்டும், தீர்வும் சொல்ல வேண்டும். (என்கவுண்டரா ? நீதி விசாரணையா என்று) அதற்கு பின்னர் போய் மோகன்ராஜின் கொலையை ஆர்ப்பரித்து தீபாவளியோ அல்லது கருமாதியையோ கொண்டாடித்தொலையட்டும் நாம் ஒன்றும் ஆட்சேபிக்கப்போவதில்லை!

எல்லாவற்றுக்கும் முன்னால் இந்த நாட்டை ஆள்கிறாரே ஒருவர் அவருடைய மூஞ்சையாவது பார்த்திருக்கிறீர்களா நீங்கள் ? பார்க்கவில்லை என்றால் சமூக உணர்வு கொப்பளிப்பதை சற்று அடக்கி வைத்துவிட்டு முதலில் அதைச் செய்யவும்.

தொடர்புடைய பதிவுகள்:

One response to “பிழைப்புவாத புழுக்கள் கொண்டாடிய இரண்டாவது தீபாவளி

  1. இதை எல்லாம் பார்கிறவன் என்னா உலகமடா இது என்று வெருத்துப்போய் ரத்தத்துக்கு ரத்தம்னு சிலர் ஆரம்பிச்சிடுறான்.

    நீதி சரியா இருந்தாதானே குற்றம் குறையும்.

    வாழ்க ஜனநாயகம்.

Leave a comment