உங்களுடைய‌ கண்ணீர் மக்களுக்காக சிந்தப்படட்டும்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் அட்டகாசம் ! அட்டூழியம் என்றெல்லாம் ஆளும் கும்பலின் ஊதுகுழல்களாக செயல்படும் பத்திரிகைகள் (ஜனநாயக தூன்கள்) அனைத்தும் இன்று ஒப்பாரி வைத்தும் ஊளையிட்டும் வருகின்றன. மக்களுக்காக போராடும் போராளிகளை தொடர்ச்சியாக பயங்கரவாதிகள் என்று சித்தரித்து வரும் இந்த அயோக்கியர்கள் இந்த நாட்டை விற்கும்,அந்த துரோகச் செயலுக்கு தடையாக நிற்கும் இந்த மண்ணின் மைந்தர்களை கொல்லும் பயங்கரவாதிகளான ப.சிதம்பரம், மன்மோகன்சிங் கும்பலை பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுவதில்லை.

தங்களை நடுநிலை நாளிதழ்கள் என்று கூறிக்கொள்ளும் பத்திரிகைகள்  இந்த கோயபல்ஸ் கும்பல்கள் அனைத்தும் அரசாங்கத்தின், ஆளும் வர்க்கத்தின் குரலையே ஒலித்து வருகின்றன. அதையே உண்மை என்றும் மக்களை நம்ப வைக்கின்றன. இந்த பத்திரிகைகளின் செல்வாக்கால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும் இறந்து போன கூலிப்படைகளுக்காக தேசபக்தியுடன் கண்ணீர் விட்டு மாவோயிஸ்டுகளை கண்டன‌ம் செய்கிறார்கள்.

வெளிநாட்டுக்காரனுக்கு நமது நாட்டை விற்கும் துரோகச்செயலுக்கு துணை நின்ற‌ ஐம்பது பேரை மாவோயிஸ்ட் தோழர்கள் கொன்றார்கள். அவர்கள் செத்துப்போனதையே பிரம்மாண்டமாக்கி, அந்த பொணத்தை வைத்துக்கொண்டு பத்திரிகைகளின் மூலம் ஒப்பாரி வைக்கும் இந்த கோயபல்சுகளிடம் கேட்க‌ சில‌ எளிமையான கேள்விகள் இருக்கின்றன.

மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் என்கிறீர்களே அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்டியுள்ள ப.சிதம்பரமும் மன்மோகன்சிங்கும் தேச பக்தர்களா ? இல்லை கைக்கூலிகளா ?

கூலிக்கு மாரடிக்கப்போன 50 சிப்பாய்கள் செத்துப்போனதற்கு ஒப்பாரி வைக்கும் நீங்கள் மகேஷ் முக்த்வி என்கிற இரண்டு வ‌யது குழந்தையின் கைவிரல்கள் வெட்டப்பட்டதை நாட்டு மக்களுக்கு சொன்னீர்களா ?

ஆயிரக்கணக்கான பழங்குடி பெண்கள் கற்பழிக்கப்பட்டது உங்களுக்கு தெரியாதா ? அதை ஏன் உங்களுடைய‌ பத்திரிகைகளில் எழுதி ஓலமிடவில்லை.

நமது நாட்டை அடிமைப்படுத்த வரும் வெளி நாட்டு கம்பெனிகளுக்காக நமது மண்ணின் மைந்தர்களான‌ மூன்று லட்சம் மக்களை அவர்களுடைய வாழ்விடங்களிலிருந்து பிடுங்கி எறிந்து அகதிகளாக்கியதை நீங்கள் இந்த நாட்டு மக்களுக்கு சொன்னீர்களா ? பன்னாட்டு முதலாளிகளுக்காக பழங்குடி மக்களின் 700 கிராமங்கள் கொழுத்தப்பட்டனவே அவை பயங்கரவாதம் இல்லையா ?

இந்த பிரச்சனையில் நீங்கள் உண்மைகளின் வேரை அறிய மறுக்கும் வரை,மக்களுக்காக போராடும் மாவோயிஸ்ட் போராளிகளை பயங்கரவாதிகள் என்றும் ப.சிதம்பரம், மன்மோகன்சிங் போன்ற ஏகாதிபத்திய கைக்கூலிகளை,மக்களை கொல்லும் பயஙரவாதிகளை தலைவர்கள் என்றும் சித்தரித்துக்கொண்டிருக்கும் வரை உங்களுடைய கூலிப்படைகள் (இராணுவம்/போலீசு) கொலை செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அது தவிர்க்கப்பட முடியாதது. ஏனெனின் மக்கள் மீது நீங்கள் தான் போரை தினித்திருக்கிறீர்கள்.

நண்பர்களே,
இந்த விசயத்தில் உண்மையை அறிந்து கொள்ளாமல் இந்த கோயபல்ஸ் பத்திரிகைகளின் செய்திகளிலிருந்து மட்டும் கொல்லப்பட்ட கூலிப்படையினருக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். அவர்கள் இந்த நாட்டை அடிமைப்படுத்தும் கைக்கூலிகளின் கொள்கையை நடைமுறைப்படுத்த,அதற்கு தடையாக நிற்கும் நமது மக்களை கொல்ல துப்பாக்கிகளுடன் காடுகளில் திரிந்தவர்கள். அந்த துரோகம் ஒழித்துக்கட்டப்பட்டது. அவர்களுக்காக நாம் கண்ணீர் சிந்துவது கேவலமானது. உங்களுடைய‌ கண்ணீர் மக்களுக்காக சிந்தப்படட்டும்.


சிதம்பரத்தின் காட்டுவேட்டைக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி

“”போர்ப் பிரகடனம் செய்!” என வெறிக் கூச்சல் போடுகிறது இந்தியக் கூட்டுப் பங்குத் தொழில் கழகங்களின் (கார்ப்பரேட் நிறுவனங்களின்) ஊதுகுழலான “”இந்தியா டுடே” ஏடு. “”மென்மையான அணுகுமுறைகள் தோற்றுப் போய்விட்டன என்று தண்டேவாடா படுகொலைகள் காட்டிவிட்டன. தோட்டாவுக்குத் தோட்டா நக்சல்கள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.” ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)களை ஒழித்துக் கட்டுவதோடு மத்திய கிழக்கு இந்தியாவில் வாழும் ஆதிவாசிபழங்குடி மக்களுக்கு எதிரான போரை இந்திய அரசு ஏற்கெனவே தொடங்கி ஆறுமாதங்களுக்கு மேலாகி விட்டன. இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கழகங்களின் கூட்டமைப்பு (FICCI) கடந்த ஆண்டு மத்தியில் விடுத்த கோரிக்கையை ஏற்று மாவோயிஸ்டுகளுக்கு எதிரான காட்டுவேட்டையைத் (ஆப்பரேஷன் கிரீன் ஹண்ட்) தொடங்கி நவீன ஆயுதங்களுடன் 60000 ஆயுதப் படையினரை ஏவிவிட்டதன் மூலம் ஒரு உள்நாட்டுப் போரை அது நடத்தி வருகிறது என்பதுதான் உண்மை.

பிறகு ஏன் உடனடியாகப் போர்ப் பிரகடனம் செய்யும்படி கூச்சல் போடவேண்டும்? கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி அதிகாலை ஜந்தரை மணி. சட்டிஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டம் சிந்தல்நாடு கிராமத்துக்குச் சற்றுத் தொலைவில் முக்ரானா காடுகளில் தற்காலிக முகாமிட்டிருந்த மத்திய ரிசர்வ் படையின் ஆல்ஃபா கம்பெனி என்ற 62வது பிரிவின் மீது இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் மக்கள் விடுதலைக் கொரில்லா இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 76 ரிசர்வ் படையினர் கொல்லப்பட்டனர். உயிர் தப்பிக்க மரங்களின் பின்னே ஓடி ஒளிந்தவர்கள் அதனடியே புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தனர். எஞ்சியவர்களை மீட்பதற்காக கோப்ரா (ராஜநாகப்) படைப்பிரிவு சென்ற குண்டு துளைக்க முடியாத கனரக ஆயுதந்தாங்கிய மோட்டார் வாகனமும் நிலக்கண்ணி வெடியில் சிக்கிச் சின்னாபின்னமாக வெடித்துச் சிதறியது.

ஆறு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுப் படையினர் தொடுத்த காட்டுவேட்டை என்ற உள்நாட்டுப் போர் நடவடிக்கையில் இதுவரை அதிகபட்சமாக இந்தத் தாக்குதலில் மட்டும் 76 பேர் கொன்றொழிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் மாவோயிஸ்டுகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சிந்தல்நாடு தாக்குதல் ஆளும் வர்க்கங்கள் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் மட்டுமல்ல பத்திரிக்கைகள் மற்றும் வானொளி உட்பட செய்தி ஊடகங்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மறுநாளே செய்தி ஊடகங்கள் கதறின. “”காட்டுமிராண்டித்தனம் “படுகொலை’ “இரத்த ஆறு’ “நக்சல் கசாப்புக் கடை வெறி ‘ “”நக்சல் அட்டூழியம்” என்று தலைப்புச் செய்திகள் நஞ்சைக் கக்கின. நக்சல்பாரிகளை விலங்கு மனிதர்கள் கோழைகள் என்று முத்திரைகுத்தி வெறுப்பை உமிழ்ந்தன. நக்சல் அனுதாபிகள் மட்டுமல்ல மனித உரிமைப் போராளிகள் கூடத் தீவிரவாதத்தின் கூட்டாளிகளாகச் சித்தரிக்கப்பட்டனர்.

திடீரென்று நாடே முற்றுகையிடப்பட்டு முழுமையான கிரமமான போரில் தள்ளப்பட்டதைப் போல ஆளும் வர்க்கக் கட்சிகள் கதறின. “”அரசுஎந்திரம் இராணுவம் விமானப்படை உட்படத் தன்னிடம் உள்ள அனைத்துச் சக்திகளையும் திரட்டி நக்சலைட்டுகளை ஒழித்துக் கட்டிவிட வேண்டும்” என்று அலறினார்கள். “”இராணுவத்தை நேரடியாக ஈடுபடுத்த முடியாவிட்டால் துணை இராணுவத்துக்கும் போலீசுக்கும் நவீன ஆயுதங்களைக் கொடுத்து மறு பயிற்சியும் மறு சீரமைப்பும் செய்து கிரமமான ஆயுதந்தாங்கிய படைகளுக்குச் சமமாக அவற்றைக் கட்டியெழுப்ப வேண்டும்; ஆயுதந்தாங்கிய கலகக்காரர்கள் எப்போதும் தாக்குதல் நிலையில் இருக்கும் போது இராணுவ அதிகாரிகளைக் கொண்டு இராணுவத்தைப் போலவே துணை இராணுவப் படைகளைத் தயாரிக்க வேண்டியது அவசர அவசியமாகி விட்டது கலகக்காரர்களை ஒடுக்குவதற்கு என்றே தனிப்பயிற்சி பெற்ற துணை இராணுவப் படைகளை உருவாக்க வேண்டும்” என்று ஆளும் வர்க்க அறிவுஜீவிகள் ஆட்சியாளர்களுக்கு உபதேசங்கள் செய்கின்றனர்.

சிந்தல்நாடு தாக்குதலுக்கும் இவ்வளவு பெரிய இழப்புக்கும் காரணம் தக்க பயிற்சி பெறாத படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டதும் போதிய உளவுத்துறை தகவல் இல்லாமல் போனதும்தான் காμணம் என்று கூறும் எதிர்ப்புரட்சி நிபுணர்கள் ஆந்திராவில் செய்ததைப் போலத் தனியார் அரசு கிரிமினல் கொலைப்படைக் குழுக்களை உருவாக்கி நக்சல்பாரிகளின் தலைமையைக் குறிவைத்துக் கொன்று விடவேண்டும். அதற்காக இரகசியமான சட்டத்துக்குப் புறம்பான உளவு மற்றும் கொலைக் குழுக்களின் வலைப்பின்னலை உருவாக்க வேண்டும்” என்று சகுனித்தனமான ஆலோசனைகளைக் கூறுகின்றனர். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஈவு இரக்கமற்ற கொடூரமான இராணுவமயமான காட்டுமிராண்டித்தனத்துக்குள் தள்ளுவதற்கே இது இட்டுச் செல்லும். சந்தேகத்துக்கிடமான எவரையும் சுட்டுத் தள்ளுவதைத்தான் குஜராத்திலும் பஞ்சாபிலும் காஷ்மீரிலும் வடகிழக்கு இந்தியாவிலும் இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதையே மத்திய இந்தியா முழுவதும் விரிவாக்கும்படி ஆளும் வர்க்க அறிவுஜீவிகள் பரிந்துரைக்கிறார்கள்.

சிந்தல்நாடு தாக்குதல் மற்றும் இழப்புகளுக்காக இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கும் அறிவுஜீவிகளும் செய்தி ஊடகங்களும் சில உண்மைகளை வசதியாக மறந்து விடுகிறார்கள். சட்டிஸ்கர் ஆந்திரா மராட்டியத்தில் எண்ணற்ற சிவிலியன் மக்கள் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவத்தாலும் கொலைக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் போலி கம்யூனிஸ்டு  இன்னாள் காங்கிரசு எம்.எல்.ஏ. தலைமையில் அரசே உருவாக்கியுள்ள சல்வாஜூடும் என்ற குண்டர்படையின் சிறப்பு போலீசு அதிகாரிகள் தலைவெட்டிக் கொலைகள் பாலியல் வன்முறைகள் சித்திரவதைகள் பழங்குடி மக்களின் குடிசைகளைத் தீயிட்டுக் கொளுத்துவது  சூறையாடுவது என்று கொலைவெறியாட்டங்கள் புரிந்துள்ளனர். ஈழத்தில் முள் கம்பி வேலிக்குள் அரசு சித்திரவதை முகாமுக்குள் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் போல இங்கே மூன்று இலட்சம் பழங்குடி மக்கள் தமது குடியிருப்புகளில் இருந்து விரட்டப்பட்டு அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிந்தல்நாடு தாக்குதலில் மாவோயிஸ்டுகளின் கொரில்லா இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களைவிடப் பன்மடங்கு அதிகமானவர்களை இந்தியத் துணை இராணுவமும் போலீசும்தேடுதல் வேட்டை என்ற பெயரில் கொன்று போட்டிருக்கிறது. சிந்தல்நாடு தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நிராயுதபாணிகளான சிவிலியன் மக்கள் அல்ல. ஆயுதந்தரித்த துணை இராணுவத்தினர்தாம். ஆனால் 2009ஆம் ஆண்டில் மட்டும் மாவோயிஸ்டுகளின் செல்வாக்குள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் 589 சிவிலியன் மக்களை அμசப் படைகள் கொன்று போட்டிருக்கின்றன் சிறுவர்களின் விரல்களை வெட்டிப் போட்டுள்ளனர்; பெண்ணின் மார்பகத்தை அறுத்து வீசியுள்ளனர்; இதைவிடக் கொடூரம்  காட்டுமிராண்டித்தனம் என்ன இருக்க முடியும்! சட்டிஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் மட்டும் வீடுகளைச் சூறையாடியும் இடித்துத் தள்ளியும் தீயிட்டுக் கொளுத்தியும் 700பழங்குடி கிராமங்களைச் சுடுகாடுகளாக்கி விட்டனர்.

இவ்வளவு அட்டூழியங்களையும் செய்தி ஊடகங்களின் உடந்தையோடு மூடி மறைத்து விட்டு “”இது ஒரு போர்; ஆயுதந்தரிக்கவோ கொல்லவோ சட்டபூர்வ உரிமையில்லாதவர்களால் அரசின் மீது திணிக்கப்பட்ட போர். தேவையானால் இராணுவம் விமானப் படையைக் கூட பயன்படுத்தி இதை எதிர்கொள்வோம்” என்றுகார்ப்பரேட் கம்பெனிகளின் முன்னாள் ஆலோசகரும் தற்போதைய மத்திய போலீசு மந்திரியுமான சிதம்பரம் எச்சரிக்கிறார் மிரட்டுகிறார்.

சிதம்பரத்தின் முறைப்படியான இந்தப் போர்ப்பிரகடனத்தைப் பகுத்துப் பார்த்தால் தற்போது இந்திய அரசு யாருக்காக எதற்காக இந்த உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது என்ற உண்மைகள் விளங்கும். நிச்சயமாக மாவோயிஸ்ட்கள் இந்த உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கவில்லை. பழங்குடி மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமது வாழ்விடங்களாகக் கொண்டுள்ள மத்திய இந்தியாவின் கனிம வளங்கள் காட்டுவளங்கள் நிலம் நீர் மற்றும் இயற்கை மூலாதாரங்களை பன்னாட்டு இந்நாட்டுத் தரகு அதிகார வர்க்கக் கூட்டுப் பங்குத் தொழில் நிறுவனங்களுக்கு அற்ப சொற்ப விலைக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. மன்மோகன் மாண்டேக்சிங் சோனியா  சிதம்பரம் கும்பல். இந்த இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கு வசதியாக பழங்குடி மக்களை அந்தப் பிராந்தியத்திலிருந்து விரட்டியடித்து வருகிறது.

இயற்கை வளங்களை அதன் உரிமையாளர்களான பழங்குடி மக்களிடமிருந்து மனிதாபிமானமற்ற முறையில் பிடுங்கி பன்னாட்டு  இந்நாட்டு தொழில் முதலைகளுக்குப் பங்கு வைப்பது என்பது அரசின் பொருளாதாரக் கொள்கையாகிவிட்ட நிலையில் அதற்குத் தடையாக நிற்கும் பழங்குடி மக்களையும் அவர்களுக்குப் பாதுகாவலனாக நிற்கும் மாவோயிஸ்டுகளையும் துணை இராணுவம் மற்றும் இராணுவம் ஆகிய அரசுப் படைகளை ஏவிவிட்டு வரலாறு காணாத காட்டுமிராண்டி பயங்கரவாத்தை ஏவிவிட்டு பிரகடனப்படுத்தாத உள்நாட்டுப் போரை இந்திய அரசுதான் தொடுத்தது. இதை ஒரு போர் என்று அரசு முறைப்படி பிரகடனப்படுத்தியதா அல்லது மாவோயிசத் தீவிரவாதத்தை இராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்குவோம் என்று திரும்பத்திரும்ப பலமுறை சொல்கிறதா என்பது முக்கியமில்லை. நடைமுறையில் இந்திய அரசு உள்நாட்டுப் போரைத்தான் நடத்தி வருகிறது.

பழங்குடி மக்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எதிராக இந்திய அரசு நடத்திவரும் இந்த உள்நாட்டுப்போரின் உண்மையான நோக்கத்தை வெளிப்படையாகக் கூறி நியாயப்படுத்த முடியாத ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்பக் கூறிவரும் ஒரே தர்க்கவாதம் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதந்தரிக்கவும் யாரையும் கொல்லவும் சட்டபூர்வமான உரிமை எதுவும் கிடையாது அரசுப் படைகள் அவ்வாறு செய்வதற்கான எல்லா நியாய உரிமைகளும் உள்ளன ஏனென்றால் அவை ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் வழிநடத்தப்படுகின்றன என்பதுதான்.

“ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் வழிநடத்தப்படுகிறது” என்பதற்காக இந்தியஅரசுப் படைகள் மேற்கொள்ளும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை படுகொலைகள் போலி மோதல்கள் சூறையாடுதல்கள் ஆகிய காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்திற்கும் சட்டப்படியான நியாயப்படியான உரிமை உண்டா? ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால் இந்நாட்டின் இயற்கை வளங்களை பன்னாட்டு இந்நாட்டுத் தμகு அதிகாμ வர்க்கங்கள் சூறையாடுவதற்கும் தாரை வார்ப்பதற்கும் கூடச் சட்டப்படியான நியாயப்படியான உரிமை அதற்கு உண்டா? இந்த நோக்கங்களுக்குத் தடையாக நிற்கும் தம் சொந்தமக்களையே கொன்றொழிக்கும் உள்நாட்டுப் போரை நடத்தவும் உரிமை உண்டா

தொடர்புடைய இடுகைகள்

Arundhati Roy: Walking with the Comrades

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

அரசின் நிர்பந்தமே மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கு காரணம்- அருந்ததி ராய்

OPERATION GREEN HUNT !!

இது தான் ப.சிதம்பரத்தாலும் மன்மோகன்சிங்காலும் விற்பனை செய்யப்பட்ட நியமகிரி மலை !!

Leave a comment